Friday, February 29, 2008

நினைவெல்லாம் நிறைந்து....

தொலைதூர பிரிவிலும்
தொல்லைக்கொடுக்கும்
உன் நினைவுகள்
நன்றாகத்தான் இருக்கின்றன.


உன் மீசை
குத்திய தடங்கள்
உன் இதழ்
பதித்த ஈரம்
உன் பற்கள்
செய்த காயங்கள்
இன்னும் ஆராமல்
மேலும் உன்னால் காயப்பட
காத்திருக்கின்றன...


உன் சுகமான
சுமையைவிட
உன் நினைவுகளின்
சுமைகள்
கனமாக இருக்கின்றன...


பேசாமல் கோபித்துக்கொண்ட
கணங்கள்
உன் குறும்புகளை ரசித்த
வெட்கங்கள்
பிரிவின் கணத்தை
ரணமாக்குகிறது..


அழகாய் இருப்பதாக
பொய் சொன்னேன் என
நீ வம்பிழுக்க...
உன்னிடம் யுத்தம் செய்யும் என்
உதடுகள்!!


ஊடலில் தான் நம்
தேடல் அதிகரித்தது.
நிறைவாகும் வரை தேடல்
தந்த வெப்பம் இன்றும்
தகிக்க வைக்கிறது...